ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் இன்று மாலை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயகரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கரு ஜயசூரியவின் ஏற்பாட்டில் இன்று மாலை 3.00 மணியளவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எதிர்த் தரப்பில் இருக்கும் கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் யாவற்றையும் இணைத்து இனவாத அரசாங்கமாக செயற்பட்டு வரும் ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான 'மெகா கூட்டணி' அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை